Difference between revisions of "Template:Suvadu Journal/Introduction"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
(Created page with "இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் தமக்குள் கொண்டிருக்கும் மரபறி...")
(No difference)

Revision as of 12:52, 12 January 2013

இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் தமக்குள் கொண்டிருக்கும் மரபறிவுச்செல்வங்கள் ஏராளமானவை. ஒவ்வொரு காலப்பரப்பிலும் அவை கண்டுகொள்ளப்படாமல் அழிந்தொழிந்து போகின்றன. நமக்கு முந்தைய தலை முறையினரிடம் இருந்து, நாம் பெற்றுக்கொண்டவற்றை விட இழந்தவைகள் ஏராளம். ஒவ்வொரு தலைமுறை எழுச்சியின் போதும் இந்த விபத்து நடந்துகொண்டே இருக்கின்றது. நமது சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் ஒவ்வொன்றும் ஆராயப்பட்டு மிகக்கவனமாக ஆவணப்படுத்தப் பட வேண்டும் என்பதில் நமக்குள் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இதுவரை செயலில் இறங்கி அதைச் செய்தவர்கள் மிகச்சிலரே. நேற்று என்பது இன்றைய வரலாறு ஆகுதல் போல இன்று என்பது நாளைய வரலாறு ஆகுதல் உறுதி. நமது சமூகங்களின் கடந்த காலத்தோடு நிகழ்காலத்தையும் பதிவுசெய்தல் என்பது முக்கியமானது. இழந்தவைகளைத் தேடிப்பெறலும் இருப்பவைகளைத் தக்கவைத்தலும் இன்றியமையாதன என்பதை வரலாறு நமக்கு பாடமாக கற்றுத் தந்திருக்கின்றது.

ஆய்வுகளைச் செய்தலும் ஆவணப்படுத்தலும் நமது சமூகத்தில் நத்தையின் வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. தொழினுட்ப வளர்ச்சியை துணையாகக் கொண்டு ஆய்வுகளையும் ஆவணப்படுத்தற் செயற்பாடுகளையும் ஊக்குவிக்கும் கடமை நம் முன் கிடக்கின்றது. நமது அடையாளங்கள் மீதும் பண்பாட்டுக்கூறுகள் மீதும் மிக நுண்மையாக கவனத்தைச் செலுத்த வேண்டிய காலத்தில் நாம் இருக்கின்றோம்.

இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களின் மரபறிவுச்செல்வங்களை ஆவணப்படுத்தல் பேணிப்பாதுகாத்தல் மூலமாக, தற்போதைய, எதிர்கால தலைமுறையினருக்கான அறிவுப் பகிர்வுப் பணியை செவ்வனே செய்து வருகின்ற நூலக நிறுவனம், தனது எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2013ம் ஆண்டிலிருந்து நூலகம் எனும் ஆய்விதழை தொடர்ச்சியாக வெளியிடவுள்ளது. நமது சமூகங்களின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பற்றிய ஆய்வுகளை ஊக்குவித்தலையும் அவற்றை விரைவாக்கலையும் செய்யவிருக்கின்ற “நூலகம்” ஆய்விதழானது, ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்று, அவற்றை சீரிய முறையில் பரிசீலித்து வெளியிடலை தனது பிரதான செயற்பாடாகக் கொண்டுள்ளது. இலங்கையில் தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்து வெளிவரக்கூடிய உயர்தரம் வாய்ந்த ஆய்விதழ்கள் இல்லாத வெறுமை வெளியினை நீக்கும் வண்ணம், “நூலகம்” ஆய்விதழ் வெளிவரவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்